×

வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 810 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 810 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: வரும் 24ம் தேதி (சனிக்கிழமை, பவுர்ணமி) 25ம் தேதி (ஞாயிறு) விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 23ம் தேதி 730 பேருந்துகளும் 24ம் தேதி 640 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி 80 பேருந்துகளும் மற்றும் 24ம் தேதி 80 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக நாளை 810 சிறப்பு பேருந்துகளும் நாளை மறுநாள் 720 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை, நாளை மறுநாள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்ள இதுவரை 7,702 பயணிகள், சனிக்கிழமை 2,818 பயணிகள் மற்றும் ஞாயிறு அன்று 7,025 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 810 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Managing Director ,Government Rapid Transport Corporation ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...